500 நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி-கருணாநிதி
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கலை வளர்ச்சிக்கு தொண்டு புரிவதையே தமது வாழ்வியல் கடமையாக கொண்டு வாழும் கலைஞர்கள், வயது முதுமை காரணமாக தொழில் வாய்ப்புகள் குறைந்து அவதிப்படுகின்றனர்.
அவர்களது துயரமான சூழ்நிலையை போக்கிட அரசு நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிதியுதவி மாதம் ரூ. 500 என்று இருந்ததை கடந்த 2006ம் ஆண்டு ரூ. ஆயிரமாக மாற்றி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
மேலும், கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா 500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 7.7.2009 அன்று தமிழக சட்டப்சபையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டும் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்க முதல்வர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 லட்சம் கூடுதலாக செலவாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.