காட்டெருமை மீது மோதி தடம்புரண்ட தார் எக்ஸ்பிரஸ்
ஜெய்ப்பூர்: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஓடும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் காட்டெருமை மீது மோதி, தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அருகில் முனாபாவ் என்ற நகரில் இருந்து பாகிஸ்தானின் சிந்து மாநிலம் கராச்சிக்கு பக்கத்தில் இருக்கும் காக்ரோபார் இடையே தார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
பழமைவாய்ந்த இந்த ரயில் போக்குவரத்து 1965 இந்திய, பாகிஸ்தான் போரின் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சுமார் 41 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டில் துவக்கப்பட்டது.
இந்த ரயில் நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலம் சாலாவாஸ் ரயில் நிலையத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூன்று காட்டெருமைகள் மீது மோதியது.
இதையடுத்து தடுமாறிய ரயில் தடம்புரண்டது. இதில் ரயில் என்ஜினும், முதல் பெட்டியின் முன் சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ரயில்வே நிர்வாகம் கிரேன் மூலம் தடம்புரண்ட என்ஜினை சரி செய்தது. இதை தொடர்ந்து ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக 4.50 மணிக்கு மீண்டும் கிளம்பியது.