மதிமுக நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம்- அழிக்க முடியாது: வைகோ
சென்னை: மதிமுக நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம். அண்ணாவின் புகழ் இருக்கும் வரை மதிமுகவும் இருக்கும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார் கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ.
காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பாலவாக்கம் சோமுவின் மகளும், ஊராட்சி மன்ற தலைவியுமான டாக்டர் தமிழரசி-வழக்கறிஞர் பரமசிவதாஸ் திருமணம் நீலாங்கரையில் இன்று நடைபெற்றது.
திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசுகையில்,
ம.தி.மு.க. வீழ்ந்து விட வில்லை. இது ஆயிரங்காலத்து பயிர். அண்ணா புகழ் இருக்கிற வரை ம.தி.மு.க. இருக்கும். இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம்.
இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மாவட்ட செயலாளர் சோமு தனது இல்ல திருமண விழாவை மாநாடு போல் நடத்தி காட்டியிருக்கிறார்.
பாலவாக்கம் சோமு ம.தி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து ம.தி.மு.க.வுக்கு எத்தனையோ சோதனைகள் சூழ்ந்துள்ள நிலையிலும் கட்சி எப்படி கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்.
சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருகிறார்.
1989-ம் ஆண்டு வன்னி பகுதிக்கு நான் சென்று திரும்பிய நேரம் என் வீட்டுக்கு தனது கைக்குழந்தையுடன் சோமு வந்திருந்தார். குழந்தைக்கு பெயர் சூட்டும்படி வேண்டினார். பிரபாகரன் என்று அந்தகுழந்தைக்கு பெயர் சூட்டினேன். கட்சி மீது அதிக ஈடுபாடு உடையவர் சோமு. அவர் மகள் தமிழரசி டாக்டராகவும், ஊராட்சி மன்ற தலைவியாகவும் இருக்கிறார்.
இலங்கை போரில் காயம் அடைந்த தமிழ் இனத்துக்கு மருத்துவ சிகிச்சை செய்ய செல்கிறேன் என்று அறிவித்தவர் தமிழரசி. அந்த அளவுக்கு இவரிடமும் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என்றார் வைகோ.