கேரளா-குப்பை கொட்டினால் ரூ. 50,000 'பைன்'!
திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நாளை சட்டபேரவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
கேரள சட்டசபை கூட்டம் நாளை துவங்கி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தும் புதிய சட்டம் நிறைவேற இருக்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாடுகளை குறைக்கும் நோக்கத்தில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு சட்டமாக இருக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை கொட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், 6 முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
இது போன்ற சட்டம் கடந்த ஜூலை முதல் கொச்சின் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குப்பை கொட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இரண்டாவது முறையும் தவறு செய்பவர்களிடம் ரூ. 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.