அடுத்த முதல்வர்: சோனியா முடிவு செய்யட்டும்-ஜெகன் ரெட்டி

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் மரணமடைந்ததால், ரோசய்யா இடைக்கால முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவைவயில் இருந்த 34 அமைச்சர்களும் நேற்று மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் ஆந்திராவின் அடுத்த முதல்வராக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 148 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் விஷயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாமாக முடிவு எடுப்பதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஜகன்மோகன் ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்,
ராஜசேகர ரெட்டியின் வாரிசாக என்னைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துவது, போராட்டம் நடத்துவது, பத்திரிகைகளுக்கு அறிக்கை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பல லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் மனதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புரிந்து கொள்வார். மாநிலத்தின் நன்மை குறித்து அவருக்கு தெரியும். முதல்வர் பதவி குறித்த முடிவை அவர்தான் எடுப்பார். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
ஒரு கட்சித் தொண்டராக, நாம் அனைவரும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொள்ளாமல் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து விசுவாசமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
ராஜசேகர ரெட்டியின் திறமையை முதலில் இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் மதித்து அங்கீகரித்தனர். அதேபோல கட்சித் தலைவர் சோனியா காந்தியும் ராஜசகேர ரெட்டி மீது மிகுந்த அபிமானம் வைத்திருந்தார். அவரது குறிக்கோளுக்கு பங்கம் விளையாதவாறு சோனியா காந்தி முடிவு எடுப்பார்.
எனவே ராஜசேகர ரெட்டி மீது மதிப்பு வைத்திருக்கும் அனைவரும், கட்சித் தலைமைக்கு விரோதமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மீடியாக்களில் எந்த செய்தியையும் அளிக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications