யுனிசெப் அதிகாரியை வெளியேற்றும் முடிவு-இலங்கை மறு பரிசீலனை
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்கள் குறிப்பாக குழந்தைகள் குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து பேட்டிகள் அளித்து வந்த யுனிசெப் அமைப்பின் கொழும்புக்கான தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் எல்டர்ஸை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் மிக மிக அவலமான நிலையில் உள்ளனர். இதுகுறித்து ஐ.நா. அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன.
ஆனால் இவற்றை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து வருகிறது இலங்கை அரசு.
இந்த நிலையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள குழந்தைகள் சத்துக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி பரிதாபகரமான நிலையில் இருப்பதாக தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்தார் எல்டர்.
இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எல்டர்ஸ் வெளியேற்ற உத்தரவு தொடர்பாக இலங்கை அரசிடம் யுனிசெப் விளக்கம் கேட்டுள்ளது.
ஐ.நா. பாஸ்போர்ட்டுடன் இருப்பவர் எல்டர். ஐ.நா. பாஸ்போர்ட்டைத் தாங்கியுள்ள ஒருவரை இலங்கையிலிருந்து வெளியேற உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வெளியேற்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய எல்டர்ஸுக்கு 2 வார கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
மறு ஆய்வு செய்கிறோம் - கொஹனா
இந்த நிலையில், எல்டரை வெளியேற்றும் முடிவை மறு ஆய்வு செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொஹனா கூறுகையில், ஜேம்ஸ் எல்டர் விவகாரம் தற்போது மறு பரிசீலனையில் உள்ளது.
யுனிசெப் நிறுவனம் எங்களுடன் பேசி வருகிறது. அவர்கள் கூறுவதை நாங்கள் கேட்டு வருகிறோம் என்றார் அவர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பலித கொஹனா, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார் எல்டர். அதை ஏற்க முடியாது. ஐ.நா. அதிகாரிகள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். எனவே இந்த விவகாரத்தை அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது.
போரின் இறுதி நாட்களின்போது சரிபார்க்கப்படாத தகவல்களை வைத்துக் கொண்டு எல்டர் அறிக்கைகளை வெளியிட்டார். அவை அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை. மாறாக, அவை அனைத்தும் புலிகள் இயக்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலித்தவை ஆகும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக இலங்கை குடியேற்றப் பிரிவு தலைவர் அபயகூன் கூறுகையில், எல்டர்ஸின் விசாவை ரத்து செய்யுமாறு அரசிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் தேதியன்று விசா ரத்து செய்யப்பட்டது. அன்றே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் யுனிசெப் அவகாசம் கேட்டதால் செப்டம்பர் 21ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.