நாளை தமிழகம் வருகிறார் ராகுல் - 5 அடுக்கு பாதுகாப்பு
நாகர்கோவில்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார். இதையடுத்து அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 9.40 மணிக்கு திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், நாகர்கோவில் வருகிறார்.
அங்குள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து சேருகிறார். பின்னர் 1200 மீனவ இளைஞர்கள் கலந்து கொள்ளும் இளம் மீனவர்கள் கூட்டத்தில் முற்பகல் 11.30 மணிக்கு அவர் பங்கேற்கிறார்.
இதையடுத்து பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினரும், என்.எஸ்.ஜி. படையினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
என்.எஸ்.ஜி. எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நாகர்கோவில் வந்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் நேரடியாக கண்காணிக்கின்றனர். கமாண்டோ படையினர், என்.எஸ்.ஜி மற்றும் மத்திய உளவுத் துறை, மாநில உளவுத்துறை போலீசார், மாநில போலீசார், உள்ளூர் போலீசார் என்று ராகுல்காந்திக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
நெல்லையில்...
நாகர்கோவில் பயணத்தை முடித்து விட்டு பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி புறப்பட்டு, நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்குகிறார்.
நெல்லையில் நடைபெறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர், விவசாயிகள், பீடித்தொழிலாளர்கள், வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.
மதுரை...
நெல்லை பயணத்தை முடித்துக் கொண்டு விருதுநகர் செல்லும் ராகுல்காந்தி, அங்கு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் இளைஞர்களை சந்திக்கிறார்.
பின்னர், மதுரை செல்கிறார். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத காரும் வரவழைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். செல்போன் உள்ளிட்ட எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லாமல் வெறும் கையுடன் செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.