தமிழில் விண்ணப்பப் படிவம் கொடுத்த பெண்ணை அடிக்கப் பாய்ந்த ரயில்வே அதிகாரிகள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக் கொடுத்தத பெண்ணையும், அவரது கணவரையும் அடிக்க முயன்றுள்ளனர் இரு ரயில்வே ஊழியர்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மந்தவெளியைச் சேர்ந்தவர் 24 வயதான லட்சுமி. இவர் பெங்களூர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவுக்காக மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்குச் சென்றார்.
அங்கு தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அதை வாங்கிய ரயில்வே கவுண்டர் ஊழியர், அந்தப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி என்ன நிரப்பிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். பின்னர் ரயில் எண் தவறாக இருப்பதாக கூறி அந்த விண்ணப்பப் படிவத்தை லட்சுமியின் முகத்தில் விசிறியடித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ரயில்வே அனுமதி அளித்திருக்கிறது. பிறகு ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டதும் ஆவேசமடைந்த அந்த ஊழியர் ஆங்கிலத்தில் கன்னாபின்னாவென்று லட்சுமியைத் திட்டியுள்ளார். அவருக்குத் துணையாக மேலும் இரு ஊழியர்கள் துணைக்குச் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்திலேயே லட்சுமியைத் திட்டியுள்ளனர். இங்கிருந்து போய் விடு என்றும் மிரட்டியுள்ளனர்.
இதைப் பார்த்த முன்பதிவு மைய சூப்பர்வைசர் குறுக்கிட்டு அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் உள்ளே அழைத்துச் சென்று விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலத்தில் நிரப்ப உதவியுள்ளார்.
இதைப் பார்த்து அங்கு வந்த அந்த மூன்று ஊழியர்களும் பெண்ணையும், அவரது கணவரையும் அடிக்கப் பாய்ந்துள்ளனர். இதை சூப்பர்வைசர் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் அவர் மீது கோபமடைந்த மூன்று ஊழியர்களும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு நில்லாமல், அந்தத் தம்பதியை டிக்கெட் முன்பதிவே செய்ய விடாமல் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் அந்த மூன்று ஊழியர்களும்.
இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று ரயில்வே தெளிவாக கூறியுள்ளது. விண்ணப்பப் படிவத்திலும் தமிழ் உள்ளது. இந்த நிலையில் தமிழில் பூர்த்தி செய்த கொடுத்த விண்ணப்பத்தை ஏற்காமலும், மிக மிக அநாகரீகமாக நடந்து கொண்டதாலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தற்போது இளந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பு கையி்ல் எடுத்துள்ளது. இந்த அமைப்பினர் ரயில் நிலையம் சென்று, பெண்ணிடமும், அவரது கணவரிடமும் அநாகரீகமாக நடந்து கொண்ட ரயில்வே ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.