ராஜன் மரணம்-போலீஸார் மீது வழக்கு
சண்முகசுந்தரம் மரணம் தொடர்பாக கைதிகள் உரிமை இயக்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பி.புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சண்முகசுந்தரம் கஸ்டடியில் இருந்தபோது மரணமடைந்த நேரத்தில் பணியில் இருந்த அனைத்துப் போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழ அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ராஜன் என்கிற சண்முக சுந்தரம் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தது தொடர்பாக ஜே 8 நீலாங்கரை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் என்ன மாதிரியான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரெல்லாம் இடம் பெற்றுள்ளது என்பதை அரசு பதில் தெரிவிக்கவில்லை.
இந்தப் பதில் மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், ஜே-8 நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்ட குறிப்பு எங்களிடம் காட்டப்பட்டுள்ளது. அதில், 2ம் பக்கம் 3வது பாராவில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டது. அதைத் தெரிவிக்க கால அவகாசம் தேவை என்று அரசு பிளீடர் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.