சங்கரன்கோவில் குளத்தில் மூன்று பிணங்கள்-கொலையா?
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள குளம் ஒன்றில் மூன்று பேரின் சடலங்கள் மிதந்தது. இது கொலையா... தற்கொலையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் அருகேயுள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். அவர் கோவையில் வேலை பார்த்த போது சுபத்ரா என்பவரை காதலித்துள்ளார்.
இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனராம்.
இவர்களுக்கு சுபத்ராவின் அண்ணி ஜெயப்பிரதா என்பவரும் உதவி செய்துள்ளதாகவும், அவரும் இவர்களோடு வீட்டை விட்டு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணி குளத்தில் 3 பிணங்கள் மிதப்பதாகவும், அப்பகுதியில் ஒரு செல்போன் அனாதையாக கிடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற அவர்கள் மாலை 6 மணியளவில் மூன்று பிரேதங்களையும், செல்போனையும் கைப்பற்றினர். பின்னர் அந்த செல் போனில் இருந்த எண்களை தொடர்பு கொண்டு அவர்கள் யார் என்பது போன்ற தகவல்களை அறிந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மூன்று பேரும் சங்கரன்கோவிலுக்கு எப்படி வந்தனர். அவர்கள் வாழ வழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது இவர்களது காதல் திருமணம் பிடிக்காமல் உறவினர்கள் யாரும் கொலை செய்து போட்டு விட்டார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications