நிருபரை மீட்க உயிர் துறந்த இங்கிலாந்து கமாண்டோ வீரர்
காபூல்: தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நிருபர் ஒருவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இங்கிலாந்து கமாண்டோ படை வீரர் உயிரிழந்தார்.
நான்கு நாட்கள் முன்னதாக வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குன்டோஸ் பகுதிக்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் ஸ்டீபன் பேரெல் என்பவர் தனது மொழி பெயர்ப்பாளர் சுல்தான் முனாடி என்பவருடன் சென்றார்.
அங்கு இருக்கும் மக்களை சந்தித்து சமீபத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற இரண்டு லாரிகள் வெடித்தது குறித்து கட்டுரை எழுதவிருந்தார். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய சில தாலிபான்கள் அவரை கடத்தி சென்றனர்.
இதையடுத்து அவரை மீட்கும் முயற்சியில் நாடோ படை களமிறங்கியது. இதையடுத்து நாடோ படையினரும், தாலிபான்களும் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.
இறுதியில் தாலிபான்கள் பேரெலை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த மோதலில் ஒரு பிரிட்டிஷ் கமாண்டோ படை வீரர் ஒருவர் பலியானார்.
பேரெலின் மொழி பெயர்ப்பாளர் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட பொது மக்கள் சிலரும் பலியானதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நிருபர் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. தற்போது 46 வயதான அவர் ஏற்கனவே கடந்த 2004ல் ஈராக்கில் வைத்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டவர்.
இந்நிலையில் அந்த நிருபர் கூறுகையில்,
நாங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. பின்னர் ஆப்கான் மற்றும் பிரிட்டிஷ் படையினரின் குரல்கள் கேட்டது.
சிறிது நேரத்தில் தாலிபான்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். எனக்கு முன்னதாக என்னுடைய மொழி பெயர்ப்பாளர் நான் நிருபர்! நிருபர்! என கூறியபடியே சென்றார்.
ஆனால், வரிசையாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் பலியானார். நான் பக்கத்தில் இருந்த சாக்கடைக்குள் குதித்து உயிர்பிழைத்தேன். அவரை சுட்டது தாலிபானா, நேடோ படையினரா என்பது தெரியவி்ல்லை என்றார்.