டேக் ஆப்-பின்போது விமானத்தின் வால் சேதம்- 139 பயணிகள் தப்பினர்
கொல்கத்தா: மும்பையிலிருந்து கொல்கத்தா வந்த ஜெட்லைட் விமானம், டேக் ஆப் ஆனபோது அதன் வால் சேதமடைந்தது. இருப்பினும் விமானம் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கியது.
இந்த விபத்தில் எந்தப் பயணியும் காயமடவில்லை என்று ஜெட்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெட்லைட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பயணிகள் யாருக்கும் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 135 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் அந்த ஜெட்லைட் விமானம் மும்பை விமான நிலையத்தில் கொல்கத்தா செல்வதற்காக டேக் ஆப் ஆனபோது, வால் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது.
விமானம் கிளம்பி பறக்கத் தொடங்கிய பின்னர்தான் வாலில் ஏற்பட்ட சேதத்தை உணர்ந்துள்ளார் விமானி. இருப்பினும் பிரச்சினை ஏற்படாது என்ற நம்பிக்கையில் கொல்கத்தாவுக்கு வந்து பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.
பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் வாலை சரிபார்ப்பதற்காக விமானம் தனி இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நீண்ட வாலுடன் கூடிய விமானங்கள் டேக் ஆப் ஆகும்போது ரன்வேயில் வால் பகுதி உரசி, இது போல ஏற்படுவது சகஜம் என்று ஜெட்லைட் விளக்கியுள்ளது. இதுபோல ஏற்பட்டால் எப்படி சரி செய்ய வேண்டும் என்பது குறித்து விமான உற்பத்தியாளர்கள் வழிமுறைகளைக் கூறியுள்ளதாகவும், எனவே பயப்படும்படியான அல்லது அசாதாரணமான நிகழ்வு அல்ல இது என்று ஜெட்லைட் தெரிவித்துள்ளது.
ஜெட் லைட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் குழுமத்தைச் சேர்ந்தது. ஜெட்ஏர்வேஸ் விமானிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளால் ஜெட்லைட் நிறுவனம் ஏராளமான விமானங்களை இயக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications