கதிர்காமர் கொலை வழக்கு-பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர் நீக்கம்
கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி இலங்கையின் முன்னாள் வெளியுறத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் இலங்கை அரசு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும், அந்த அமைப்பின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் என்ற சிவசங்கரனை இரண்டாவது குற்றவாளியாகவும் அறிவித்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் இவர்கள் இருவரும் பலியாகிவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது.
இதையடுத்து கதிர்காமர் கொலை வழக்கில் இருந்து அவர்கள் இருவரது பெயரையும் நீக்க வேண்டும் என இலங்கையின் அட்டார்னி ஜெனரல் மோகன் பெய்ரிஸ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்தார்.
இந்நிலையி்ல இது குறித்து பெய்ரிஸ் கூறுகையில்,
பிரபாகரன், பொட்டு அம்மன் பெயரை நீக்கிவி்ட்டு, கதிர்காமர் கொலை வழக்கில் 5வது மற்றம் 6வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கும் முத்தையா சகாயதேவன் மற்றும் ஆரோக்யராஜ் ஆரோக்யநாதன் ஆகியோரை முதலிரண்டு முக்கிய குற்றவாளிகளாக மாற்ற வேண்டும் என நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தோம்.
மேலும், பிரபாகரன், பொட்டு அம்மன் இருவரும் இறந்துவிட்டதாக நீதிமன்றத்துக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளோம். இதை விசாரித்த நீதிபதி குமுதினி விக்ரமசிங்கே அவர்களது பெயரை நேற்று முன்தினம் வழக்கில் இருந்து நீக்கியுள்ளார் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் இறப்பு சான்றிதழை இந்திய அரசு இலங்கையிடம் கேட்டு வருகிறது. ஆனால், அவர்கள் இதுவரை அதுக்கான சான்றிதழை கொடுக்கவில்லை.
இந்நிலையில் கதிர்காமர் கொலை வழக்கில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.