அவதூறு வழக்கு-வைகோவுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதியே காரணம் என மதிமுக பொது செயலாளர் வைகோ அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னையில் கடந்த மே 30ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்வபத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தான் காரணம் என தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை நகர குற்றவியல் வக்கீல் ஷாஜகான் தமிழக அரசு சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில், வைகோவின் பேச்சு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவத்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை இன்று முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் விசாரணைக்கு எடுத்து கொண்டார். பின்னர் அவர் அடுத்த மாதம் 12ம் தேதி வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.