அதிமுக எம்எல்ஏக்கள் கட்சிக்கு முழுக்கா?-விஷமச் செய்தி என்கிறார் ஜெ!

கொடநாடு எஸ்டேட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கை:
'அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகப் போகிறார்கள்" என்ற வதந்தியை, விஷமத்தனமான செய்தியை, பொய்ப் பிரச்சாரத்தை சிறிது காலமாக திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் காவல் துறையினர் தொடர்ந்து பரப்பிக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிடச் சொல்லி சில பத்திரிகைகளையும், வார இதழ்களையும் காவல் துறையினர் மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே, 'அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகப் போகிறார்கள்" என்ற தவறான, விஷமத்தனமான பொய்ச் செய்தியை தொடர்ந்து காவல்துறை பரப்பி வருவதற்கும், காவல் துறையின் அச்சுறுத்தலின் பேரில் ஒரு சில பத்திரிகைகள் இது போன்ற தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதற்கும் முழுமுதற் காரணமான திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியைக் கண்டித்தும்,
இது போன்ற விஷமத்தனமான செய்திகளை பரப்புவதற்கு காவல்துறையை பயன்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் காவல் துறையை செயல்படச் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் வரும் 12ம் தேதி காலை 9.30 மணி அளவில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் வட சென்னை மாவட்டக் அதிமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் சதிச் செயல்களை முறியடிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications