சங்கரராமன் கொலை-அரசு சாட்சிகள் சூப்பர் பல்டி!
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் அரசு சாட்சிகள் அந்தர் பல்டி அடிப்பது தொடர் கதையாகி விட்டது. மேலும் இரு சாட்சிகள் தற்போது பல்டி அடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தற்போது புதுவை மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணை கடந்த மாதம் தொடங்கியது.
இதில் அரசுத் தரப்பு சாட்சிகளான துரைக்கண்ணு, குமார் ஆகிய 2 பேர் வாக்குமூலத்தை மாற்றி சாட்சியம் அளித்தனர்.
நேற்று மீண்டும் இந்த வழக்கு மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சுந்தரேசய அய்யர், ரகு, அப்பு, கதிரவன் உள்ளிட்ட 14 பேர் ஆஜராகினர்.
இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசம்பந்தம், கடை ஊழியர் சிட்டிபாபு, காவலாளி சுந்தரராஜன், தள்ளுவண்டி வியாபாரி கஸ்தூரி, வியாபாரிகள் பாஸ்கர், நடராஜ் ஆகிய 6 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் வியாபாரிகள் பாஸ்கரும், நடராஜனும் காவல் துறையினரிடம் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை மாற்றி சாட்சியம் அளித்தனர்.
இதன் மூலம் பல்டி அடித்த சாட்சிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மொத்தமுள்ள 370 சாட்சிகளில் இதுவரை 20 பேரிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications