சிலை பணிகள்-இரவு 7 மணிக்குள் நிறுத்த மாயாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: லக்னோவில் கட்டப்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் பூங்கா உள்ளிட்ட 6 நினைவிடங்களின் கட்டுமானப் பணிகளை இன்று இரவு 7 மணிக்குள் நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாட்ச்மேன் தவிர வேறு யாரும் அந்த கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இன்று இரவு 7 மணிக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நீதிபதிகள் பி.என்.அகர்வால், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்தது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டும் ஒரு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கூறுகையில், செப்டம்பர் 8ம் தேதி மாநில அரசு, எந்தவித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. உ.பி. அரசின் சார்பில் நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் அந்த உத்தரவாதத்தை, மூத்த அதிகாரியான நீங்களே மீறியிருப்பது வருத்தத்துக்குரியது என்றனர்.
கடந்த 8ம் தேதி உச்சநீதிமன்றம், மாயாவதி அரசு ரூ. 2,600 கோடி செலவில், கன்ஷிராம் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு நினைவிடங்கள் கட்டுவதைக் கடுமையாக கண்டித்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications