அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையில் தூக்கி வீசப்பட்ட திமுக பிரமுகர்
சிவகாசி: சிவகாசி அருகே சல்வார்பட்டியில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் மேடையில் இருந்த திமுக பிரமுகர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றியம், சல்வார்பட்டியில் பொது மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலர் கனிராஜ், இறவார்பட்டி தி.மு.க கிளை செயலர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய செயலர் கனிராஜுக்கும், கிளை செயலர் கருப்பையாவுக்கும் இடையே நீண்ட நாளாக மன கசப்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், விழா மேடையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கருப்பையா மாலை, சால்வை அணிவிக்க வந்தார். அவரை ஒன்றிய செயலாளர் கனிராஜ் -ம், அவரது கோஷ்டியினரும் தடுத்தனர்.
கட்சிக்காரர்கள் சால்வை, மாலை அணிவிப்பதை தடுக்க வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதால் அவருக்கு, கருப்பையா மாலை, சால்வை அணிவித்தார்.
அப்போது கனிராஜ் கோஷ்டியினர், கருப்பையாவை மேடையில் இருந்து கீழே தள்ளி தூக்கி விசினர். இதில், இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் இலவச கலர் டிவி வாங்க வந்த பயனாளிகள் அலறி அடித்து ஓடினர். போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.