தேமுதிக வளர்ச்சியால் திமுக-அதிமுக அச்சம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சேரன்மகாதேவி: தேமுதிகவின் வளர்ச்சியைப் பார்த்து திமுக, அதிமுக ஆகியவை பயந்து போயுள்ளன என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சேரன்மகாதேவியில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர்,
தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்களை தேடி செல்லும் நிலையில் தான் பிற அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால், விஜயகாந்த்தின் பின்னால் இளைஞர்கள், இளம் பெண்கள் திரளுகிறார்கள்.
விஜய்காந்த் தான் சம்பாதித்த பணத்தில் பிறருக்கு உதவி செய்பவர். தேமுதிகவின் போராட்டங்கள் கூட மக்களை பாதிக்காத வகையில் தான் இருக்கும்.
சமீபத்திய இடைத்தேர்தலில் தேமுதிக 23 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இதை கண்டு திமுக, அதிமுக ஆகியவை அச்சமடைந்துள்ளன. தமிழகத்தில், இனி தேமுதிக இல்லாத அரசியல் இல்லை.
இதனால் தான் எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். கூட்டணி அமைத்தால் சில இடங்கள் வேண்டுமானால் கிடைக்கும். ஆனால், மக்களுக்கு வளர்ச்சி கிடைக்காது. எனவேதான் தேமுதிக தனித்தே தேர்தல் களத்தில் நிற்கிறது.
ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்று கூறும் ராகுல்காந்தி, திமுகவுடன் உறவு பலமாக உள்ளது என்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான பேச்சாக உள்ளதே என்றார் ராமச்சந்திரன்.
தேர்தல் பணிச் செயலாளராக பாண்டியராஜன்:
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக தேர்தல் பணிச் செயலாளராக மாபா.பாண்டியராஜன், மாநில தொழிற்சங்க துணைத் தலைவர்களாக சுப்பிரமணியராஜா, கமலக்கண்ணன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ராமநாதன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மருதையன்,
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக ரமேஷ்பிரபாகரன், மாவட்ட அவைத் தலைவராக தங்கபாண்டியன், பொருளாளராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications