செப்டம்பர் 18 வரை ஜெட் ஏர்வேஸில் பாதி கட்டணம்!
மும்பை: விமானிகள் ஸ்ட்ரைக்கால் ஸ்தம்பித்துப் போன ஜெட் ஏர்வேஸைத் தூக்கி நிறுத்த அந்நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் 13 ஞாயிறு முதல் 18-ம் தேதி வரை ஜெட் ஏர்வேஸின் அனைத்து உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
இது எகானமி க்ளாஸுக்கு மட்டும் பொருந்தும்.
ஜெட் ஏர்வேஸில் ஸ்ட்ரைக்குக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 23000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்தன. ஆனால் ஸ்ட்ரைக்கின் போது இந்த எண்ணிக்கை 5000 முதல் 7000 ஆகக் குறைந்துவிட்டது.
ஸ்ட்ரைக் முடிந்து அனைத்து விமானங்களும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள டிக்கெட் விலைக் குறைப்பு எனும் ஆயுதத்தை கையிலடுத்துள்ளது ஜெட்.
இதன்படி அடுத்த ஒருவாரத்துக்கு அனைத்து ஜெட் ஏர்வேஸ் உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணக் குறைப்பு செய்யப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸை நம்பர் ஒன் விமான சேவை நிறுவனமாக மாற்றிக் காட்டுவேன் என்றும் அறிவித்துள்ளார் கோயல்.