இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்: கேபியிடம் பாக். விசாரணை நடத்துமாம்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்தாலும் உலகம் மௌனமான வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.
இப்போது அவரிடம் இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பு வரப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளதாம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி கூறியிருந்தார்.
எனவே, இதனை தெளிவுபடுத்த கேபியிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த, அங்குள்ள தீவிரவாதிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருகின்றன இலங்கையும் பாகிஸ்தானும்.
வன்னிப் போரில் புலிகள் தோற்கடிக்கப்படும்வரை இந்தக் குற்றச்சாட்டை இந்திய உளவுத் துறைமீது சுமத்தி வந்தது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications