ராகுல் பேரவை பெயரில் மோசடி-பெண் கைது
தென்காசி: தென்காசி அருகே ராகுல் பேரவை என்ற பெயரில் பொது மக்களிடம் நிதி மோசடி செய்த பெண் ஒருவரை பொதுமக்கள் சிறைபிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர்.
தென்காசி அருகே நன்னகரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெண் ஒருவர் பொதுமக்களிடம் ராகுல் பேரவையில் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி தருவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் ரூ.5 ஆயிரம் மட்டுமே திரும்ப செலுத்தினால் போதும் என்றும், மீதி ரூ. 5 ஆயிரம் மானியமாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதில் உறுப்பினராக சேருவதற்கு ரூ.35 கேட்டுள்ளார். இதையடுத்து ரூ. 5 ஆயிரம் மானியம் கிடைக்கிறதே என பொதுமக்கள் போட்டி போட்டு அப்பெண்ணிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண் அவர்களிடம் 2 பாஸ்போர்ட் போட்டோ, ரேசன் கார்டு ஜெராக்ஸ், பள்ளி சான்று ஜெராக்ஸ் போன்றவற்றை அப்பெண் பெற்றுள்ளார்.
அந்த பெண் சிலரிடம் தனது பெயர் பூங்காவனம் என்றும், சிலரிடம் வசந்தா என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது நடவடிக்கையி்ல் சந்தேகம் அடைந்த சிலர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு போன் செய்து விபரம் கேட்டுள்ளனர். அப்போது அப்படி எந்த திட்டமும் ராகுல் பேரவை சார்பில் இல்லை என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் தங்களை ஏமாற்றியதை அறிந்த அவர்கள் அவரை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். அப்போது அந்த பெண் தனது பெயர் வலையபூமியம்மாள் என்றும், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரி் மனைவி என்பதை ஒப்பு கொண்டுள்ளார்.
மேலும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், கடையநல்லூரை சேர்ந்த கணேசன் என்பவர்தான் தன்னிடம் இப்படி ஒரு திட்டமி இருப்பதாக பணம் வாங்க சொன்னார் என்றார்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பெண்ணை குற்றாலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.