பொதிகை டிவியில் கிருஸ்துவ மத பிரசாரம்-விஎச்பி
சிவகங்கை: மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு திருப்பதியில் நினைவுச் சின்னம் அமைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொது செயலர் கோபாலரத்தினம் பேசுகையில்,
மத்திய அரசின் பொதிகை டிவியில் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்யப்படுகின்றது. இது கண்டிக்கதக்க செயலாகும்.
ஊட்டியில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீசாரின் மெத்தனத்தால் இந்து, முஸ்லிம்கள் மோதல் ஏற்பட்டது. முஸ்லிம்கள் புகார் கொடுக்காமலே இந்துக்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைதானவர்களை போலீசார் உடனே விடுவிக்க வேண்டும்.
ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு, திருப்பதியில் நினைவு சின்னம் அமைக்க கூடாது என்றார்.
திகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்-இ.முன்னணியினர் கைது:
இதற்கிடையே திராவிடர் கழகத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, சிவசேனா அமைப்புகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாதி ஒழிப்பு மற்றும் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இந்து முன்னணி, சிவசேனாவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் இருந்த சிலர் கறுப்பு கொடிகளை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தி.கவினர் பதில் போராட்டம்:
இதற்கிடையே எரிக்கப்பட்ட கொடி திராவிடர் கழகத்தின் கொடி என்று வதந்தி பரவியதால் அங்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் எரிக்கப்பட்ட கொடி திராவிடர் கழகத்தின் கொடி அல்ல, கறுப்பு கொடி என்றும் கொடியை எரித்தவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து கொண்டு சென்று விட்டதாகவும் கூறினர்.
ஆனாலும் சமதானமடையாத திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் 960 இ.முன்னணியினர் கைது:
இந் நிலையில் திருப்பூரில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 960 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications