ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டி-யுஎஸ் செல்கிறது
ஹைதராபாத்: விபத்தில் சிக்கிய ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதையடுத்து ஹெலிகாப்டரில் கடைசி சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது விரைவில் தெரியவரும்.
கடந்த 2ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நல்லமலா காட்டு பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ராஜசேகர ரெட்டி உட்பட பயணம் செய்த ஐந்து பேரும் பலியானார்கள்.
இதையடுத்து கமாண்டோ படையினர் உடைந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரித்தனர். அப்போது கறுப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், விபத்தில் கறுப்பு பெட்டி பலத்த சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கறுப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்பி சரிசெய்ய முயற்சித்து வருகிறது.
இது குறித்து சிபிஐ டிஐஜி லட்சுமி நாராயணா கூறுகையில்,
கறுப்பு பெட்டிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் பதிவாகியிருக்கும் விமானிகளின் பேச்சுக்களை கேட்க முடியவில்லை. இதையடுத்து இந்த பெட்டியை அமெரிக்காவுக்கு ஒரிரு நாட்களில் அனுப்ப இருக்கிறோம்.
கறுப்பு பெட்டியில் பதிவாயிருக்கும் செய்திகள் இன்னும் 10 நாட்களில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications