மறைந்திருந்து பேசும் மர்மமென்ன.. ஜெவுக்கு அழகிரி கேள்வி!
சென்னை: தமிழக கேபிள் டி.வி. எம்எஸ்ஓ கூட்டமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா சென்னை நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் நடந்தது.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இதைத் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
மதுரையில் ஆர்சிவி எம்.எஸ்.ஓவை எனது மகன் நடத்தி வருகிறார். அதற்கு எனது நண்பர்கள் துணையாக உள்ளனர். அவர்கள் இங்கே புதிதாக சங்கம் தொடங்கி உள்ளனர். அதைத் தொடங்கி வைக்க என்னை அழைத்தனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சங்க அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன்.
முதல்வர் கருணாநிதி கூறியது போல தென் மாவட்டங்களில் நிறைய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக எனது மதுரை தொகுதியில் அடங்கிய மேலூரில் பாலித்தீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.
நாடாராளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும், நீங்கள் நாடாளுமன்றத்தில் ஓடி ஒளிவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,
முதலில் ஜெயலலிதா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள். எங்கேயே மறைந்து இருந்து கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களும், அமைச்சர்களும் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் தமிழ் உணர்வை வரவேற்கிறோம். இவ்வளவு தாமதமானாலும் ஜெயலலிதாவுக்கு தமிழ் உணர்வு வந்ததற்கு நன்றி என்றார்.
விவசாயிகளுக்கே நேரடியாக மானியம்
முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உர விற்பனையாளர்களுக்குத் தான் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை விட விவசாயிகளுக்கே அந்த மானியத்தைத் தந்தால் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசிளேன். இந்த விஷயத்தில் மத்திய, மாநில விவசாயத்துறைச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
அரசு மானியத்துடன் வழங்கப்படும் பொட்டாசியம் குளோரைடை சில தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்காலில் இந்தத் தவறைச் செய்ய ஒரு நிறுவனத்துக்கு பொட்டாசியம் குளாரைடு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொட்டாசியம் குளேரைடை இந்த நிறுவனங்கள் வேறு தொழில்களுக்கு திருப்பி விடுவதால் சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் இதை மூலப் பொருளாகக் கொண்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications