ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுகவினர் அடிதடி
பண்ருட்டி: பன்ருட்டி அருகே துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை செய்வதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், நெல்லிகுப்பம் எம்எல்ஏ சபா ராஜேந்தரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த மனக்கசப்பு தான் துணை முதல்வர் வரும் 20ம் தேதி பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுர திறப்பு விழாவுக்கான ஏற்பாட்டின் போது மோதலாக மாறியுள்ளதாக தெரிகிறது.
இந்த விழாவுக்காக திமுகவினர் சார்பில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்கு பக்கத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஸ்டாலினை வரவேற்று யார் டிஜிட்டல் போர்டுகள் வைப்பது என்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் நெல்லிகுப்பம் எம்எல்ஏ ஆதரவாளரான காடாம்புலியூர் ஊராட்சித் தலைவர் பார்வதி மகன் அறிவழகன் பிரிவினர் மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவாளரான மேலிருப்பு ஊராட்சித் தலைவர் சூடாமணி மகன் தளபதியுடன் வந்தவர்கள் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில், படுகாயமடைந்த திமுகவினர் தளபதி( 35), எலந்தம்பட்டு ஜெயபால்(45), அறிவழகன் (40), செல்லபெருமாள் (39) ஆகிய நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து காடாம்புலியூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications