பணம்-பதவி ஆசையில் தலைவர்கள்-நரேஷ் குப்தா
நெல்லை கலெக்டர் ஜெயராமன் மற்றும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திருச்செந்தூர் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் காலி பணியிடங்களை கணக்கிட்ட பிறகு தான் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
தொடர்ந்து எலக்ட்ரானிக் வாக்கு பதிவிற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். என்றார்.
முன்னதாக அமெரிக்கத் தூதரகம் மற்றும் சேவியர் கல்லூரி ஆகியவை இணைந்து ஜனநாயகத்தில் யார் சிறந்த தலைவர், என்ற தலைப்பில் பேச்சு போட்டியை பாளையங்கோட்டையில் நடத்தின.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்லூரிகளில் இருந்து 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில் பேசிய குப்தா, தலைவர்கள் பணம், பதவி, ஈகோவிலிருந்து விடுபட்டால் மட்டுமே நாடு முன்னேறும்.
அனைத்து மட்டங்களிலிருந்தும் தலைவர்கள் வருகிறார்கள். இவர்களில் லிங்கன், மண்டலே, காந்தியடிகள், ஆகியோர் மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தனர். ஆனால் தற்போதைய தலைவர்கள் பணம், பதவி ஈகோவில் உள்ளனர். எனவே அதிலிருந்து தலைவர்கள் மீண்டால் நாடு முன்னேறும் என்றார்.
நிகழ்ச்சியில் நெல்லை பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன், சேவியர் கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம், அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் லாரன் கொலிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தூதரக சர்வதேச பரிமாற்ற இயக்குனர் நிக்கோலஸ் நம்பா, பல்கலைக்கழக பேராசிரியர் மணிக்குமார் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். இதற்கு மாணவர்கள் பதிலளித்தனர்.