ஜெ. ஆர்ப்பாட்டத்துக்காக அறிக்கை விடுகிறார்'
சென்னை: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா எப்படியாவது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அறிக்கை விடுகிறார் என் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கை,
தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து பல கோட்டங்களுக்கு பேருந்துகளை பிரித்து கொடுக்க முடிவெடுத்து இருப்பதாகவும், அண்ணா நூற்றாண்டு நிறைவு நாளான 15ம் தேதி பல பேருந்துகளை பிரித்துக் கொடுத்துள்ளனர் என்றும் கோடநாட்டில் மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
அதற்காக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் இன்று வரை எந்த கோட்டத்திற்கும் எந்த பேருந்தையும் பிரித்துக்கொடுக்கப்படவில்லை. அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆனால் விரைவு பேருந்து கழகத்தில் தற்போது ஓடி கொண்டிருக்கும் பேருந்துகளால் கூடுதலாக இழப்பு ஏற்படுகிறது.
விரைவுப் பேருந்து கழகத்தின் சார்பில் வெளி மாநிலங்களுக்கு அல்லாது தமிழகத்திற்குள் ஓடுகின்ற பஸ்களை மற்ற போக்குவரத்து கழகங்களின் வசம் ஒப்படைப்பதன் மூலம் இந்த இழப்பை குறைத்திட முடியும் என்று ஒரு கருத்து பேச்சளவில் இருந்தது.
இதை வைத்துக்கொண்டு நாங்கள் அவ்வாறு முடிவெடுத்ததாக கருதிக்கொண்டு, எதையாவது அறிக்கை விட வேண்டும், எதற்காகவாவது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அறிக்கை விட்டு வருகிறார் என அதில் நேரு கூறியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்கு-தேமுதிக...
இந நிலைில் தேமுதிக தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில்,
தேமுதிக தொழிற்சங்க பேரவையின் மாநில பிரிவு நிர்வாகிகளை விரிவாக்கம் செய்யவும், மாவட்டங்களில் பிரிவு அமைப்புகளை ஏற்படுத்தவும் பேரவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி, அவர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு பொது துறை தொழிலாளர்கள், பஞ்சாலை, தோட்ட தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
போக்குவரத்து கட்டணங்கள் 50 காசு திடீரென உயர்த்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகங்களின் பஸ்களையும், தொழிலாளர்களையும் வேறு போக்குவரத்து கழகங்களுக்கு மாற்று முடிவை கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.