இடைத்தேர்தல்: மீண்டு வந்த லாலு-அதிர்ச்சியில் நிதீஷ்
டெல்லி: சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை புரட்டிப் போட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ். அதே போல டெல்லி இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளது காங்கிரஸ்.
இதனால் காங்கிரசும் நிதீஷ் குமாரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பீகாரில் 18 தொகுதிகளுக்கும், டெல்லியில் இரண்டு தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
பீகாரில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணி 9 இடங்களில் வென்றுள்ளது.
முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும், பாஜக 2 தொகுதிகளிலும் மட்டுமே வென்றுள்ளன.
காங்கிரஸ் 2 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் வென்றுள்ளன. மற்ற இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளனர்.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் 40ல் 32 தொகுதிகளில் வென்ற நிதீஷ்-பாஜக கூட்டணி நான்கு மாத காலத்திற்குள் பெரும் சரிவுக்கு ஆளாகியுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜகவை அப்படியே தூக்கி சாப்பிட்ட காங்கிரஸ் இடைத் தேர்தலில் நன்றாகவே சறுக்கியுள்ளது. இங்கு 2 இடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் துவாரகா தொகுதியில் பாஜகவும், ஓக்லா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளமும் வென்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உட்கட்சி பூசல் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து லாலு கூறுகையில், இது செமி பைனல் தான். சட்டமன்றத் தேர்தல் வரட்டும்.. நான் யாரென்று காட்டுகிறேன் என்றார்.
லாலுவை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ந்த நிதீஷ்-பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் லாலு.












Click it and Unblock the Notifications