ஸ்வைன்: ஹைதராபாத்தில் 6 பேர் பலி-இந்தியாவில் 220
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று ஹைதராபாத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 220ஐ தொட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இறந்த அனைவரும் கடந்த 13 முதல் 15ம் தேதிக்குள் பலியாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று தான் உறுதி செய்யப்பட்டது.
அதே போல் கர்நாடகாவில் இருவர் இறந்துள்ளனர். பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்ட 35 வயது நபரும், பிஜப்பூரில் 40 வயது பெண்ணும் பலியாகியுள்லனர். இந்த மாநிலத்தில் இதுவரை 73 பேர் இந்த காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்தியாவில் 208 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மெக்சிகோவை முந்தியது இந்தியா...
உலக அளவில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 607 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 3,205 பேர் இறந்துவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பன்றி காய்ச்சல் உருவான மெக்சிகோவில் நேற்று வரை 217 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், இந்தியா மெக்சிகோவை இந்த விஷயத்தில் விரைவாக முந்திவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இதுவரை 220 பேர் பலியாகியுள்ளனர்.