முல்லைபெரியாறு புதிய அணை: ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் - வைகோ
சென்னை: முல்லைபெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் நிலையை உருவாக்கும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை..
கடந்த 2006ல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிமுக அரசின் முயற்சியால் உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. ஆனால், அதை கேரள அரசு உதாசீனம் செய்துவிட்டது.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் டெல்லிக்கு திரும்பத் திரும்ப சென்று அணை உடையும் ஆபத்து இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை தந்து அணையின் நிர்வாகத்தை கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதையடுத்து பிரதமர் கேரள அரசின் கோரிக்கையை ஆய்வு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை மற்றும் சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது கண்டனத்துக்குரிய தவறான நடவடிக்கையாகும்.
இந்நிலையில் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து, பூர்வாங்க வேலைகளையும் தொடங்கி விட்டது. இதனால் தென்தமிழ்நாட்டில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதியை இழப்பதுடன் குடிநீருக்கும் வழியின்றி போகும் விபரீதம் உருவாகும்.
புதிய அணை கட்டுவது குறித்து கேரள அரசு ஆய்வு செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி ஆய்வு செய்ய அனுமதித்ததே தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.
தமிழகத்துக்கு கேரளம் அநீதி இழைப்பதை மத்திய அரசு அனுமதித்து ஊக்குவிக்குமானால், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே உலைவைக்கின்ற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications