வன்னியர் சொத்து-'ராமதாஸ் குடும்பம் அபகரிப்பு'
விழுப்புரம்: வன்னியர்களின் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது குடும்பம் அபகரித்துள்ளது என, வன்னியர் கூட்டமைப்பின் செயல் தலைவர் சி.என்.ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வன்னியர் கூட்டமைப்பின் செயல் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வன்னியர் கூட்டமைப்பு, தந்தை பெரியார் கொள்கைகளை கடைப்பிடிக்கிறது.
இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்த தியாகிகளுக்காக தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். மொழிப் போர் தியாகிகளுக்கு வழங்குவது போல் வீடு, பென்ஷன், வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த நாளை சமூக நீதி விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர், மேலும், மக்களை அச்சுறுத்தவும் பயன்படுத்துகின்றனர் என சட்டசபை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ செல்வராஜ் கூறியதோடு அச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1931 ம் ஆண்டுக்கு பிறகு இனவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, தற்போது மீண்டும் இனவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வன்னிய சமூக மக்கள் பயனடைவதற்காக இருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துக்களை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளனர். எனவே, அந்த சொத்துக்களை அவர்களிடம் இருந்து மீட்டு வன்னியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
குறிப்பாக திருச்செந்தூரில் சரஸ்வதி ராமதாஸ் திருமண மண்டபம், தென்காசியில் அன்புமணி ராமதாஸ் திருமண மண்டபம், சிதம்பரம், திருத்தணி உட்பட பல்வேறு இடங்களை கூறலாம்.
இட ஒதுக்கீட்டிற்காக முதல்வர் கருணாநிதியும், நானும் தான் கையெழுத்து போட்டோம். ஆனால், ராமதாஸ் நான் தான் இட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறேன், இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என கூறுகிறார்.
உயிரிழந்தவர்களின் படத்தை கூட எங்கும் வைக்காத அவர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தகுதியற்றவர்.
அரசியல் கட்சியினருடன் ஒத்து போகாத ராமதாஸ், அடிதடி, வெட்டு குத்து என வன்முறை அரசியல் நடத்துகிறார். இதனால், கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தமிழக அரசிடம் அடிக்கடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரும் டாக்டர் ராமதாஸ், இது வரை வன்னியர் சமூகத்திற்காக என்ன செய்தார் என்று வெள்ளை அறிக்கை விட தயாரா என்று ராமமூர்த்தி சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications