பிரபாகரன் தேசதுரோகி-இளங்கோவன்!
ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதிபாடுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் கூறுகையில்,
பெரியார் படத்துடன் தேசதுரோகி படத்தை இணைத்து வைத்துள்ளனர். துரோகிகள், தீவிரவாதிகள் அதிகரிப்பதை பெரியார் என்றும் விரும்ப மாட்டார்.
பிரபாகரனை பற்றி துதிபாடுபவர்கள், பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.
நதிநீர் ராகுல் சொன்னது சரி தான்...
ராகுல் காந்தியின் கருத்துக்கள் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி தமிழக சுற்றுப் பயணத்தின் போது தேசிய நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்குமென கூறினார்.
இது, ஏற்கக் கூடிய கருத்து தான். அப்படி நதிகளை இணைக்கும்போது பல காடுகள், ஊர்கள் காணாமல் போகும். நதிநீர் பிரச்னை விவாதிக்க வேண்டிய பிரச்னை.
வைகோ காணாமல் போய்விட்டார்...
சிங்கமாக வெடித்து, புலியாக மாறிய வைகோ இன்று காணாமல் போய்விட்டார். இவர் ராகுலை கத்துக்குட்டி எனக்கூறியது அவரின் அறியாமையை காட்டுகிறது.
கல்லூரி மாணவ, மாணவியரிடம் ராகுல் காந்தி பேசியதற்கு பிறகு, பாஜக காணாமல் போய்விட்டது. ராகுல் காந்தி கல்லூரிக்கு சென்று அரசியலை பற்றி அவர்களிடம் கலந்து பேசியதால் நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
கள்ளுக்கடை ஒரு கட்டத்தில் தேவையற்றது என பெரியார் கூறினார். காலப் போக்கில் சூழ்நிலைகள் மாறும் போது மாறித்தான் ஆகவேண்டும். இதனால் தான் ஒரு கட்டத்தில் பெரியாரே கள்ளுக்கடை தேவையென கூறினார் என்றார்.