யு.எஸ் நெருக்குதலால் கைதாகிறார் ஹபீஸ் சயீத்!
இதையடுத்து அவர் கைது செய்ய்படுவார் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
பைசலாபாத்தில் உள்ள 2 காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டுமே தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜிஹாதுக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக ஒரு வழக்கும், இன்னொரு வழக்குமாக 2 வழக்குகள் சயீத் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்த வரலாறு காணாத மும்பை தீவிரவாதத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் சயீத்தான். இந்த தாக்குதலில் 26 வெளிநாட்டினர் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜமாத் உத் தவா தடை செய்யப்பட்டது. சயீத் உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான் அரசின் அலட்சியப் போக்கு காரணமாக கடந்த ஜூன் மாதம் சயீத் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனமும், ஆட்சேபனையும் தெரிவித்திருந்தது. சயீத்தைக் காப்பாற்ற பாகிஸ்தான் முயல்வதாகவும், மும்பை தாக்குதல் வழக்கை முடக்கி விடவும் அது முயற்சிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.
சயீத்துக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் கொடுத்தும் கூட பாகிஸ்தான் சயீத்துக்கு ஆதரவான போக்கில் செயல்படுவதையும் இந்தியா கடுமையாக கண்டித்திருந்தது.
இந்த நிலையில் மறுபக்கம் அமெரிக்காவும், சயீத்துக்கு எதிராக செயல்படுமாறு பாகிஸ்தான் அரசை நிர்ப்பந்தித்து வந்தது.
இந்தப் பின்னணியில்தான் சயீத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட மும்பைத் தாக்குதல் தொடர்பாக அவர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயம் கைது செய்வோம்- போலீஸ்
இந்த நிலையில் சயீத் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சயீத் தவிர அபு ஜிந்தால் என்பவர் மீதும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிஹாத்துக்கு அழைப்பு விடுத்ததற்காகவும், நிதி தருமாறு அழைப்பு விடுத்ததற்காகவும் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.
பைசலாபாத்தில் நடந்த இப்தார் விருந்தின்போது ஜிஹாத்துக்கு நிதியுதவி கோரி பேசியுள்ளார் சயீத். மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
அதேபோல அபு ஜிந்தால் தனியாக நடத்திய இப்தார் விருந்தின்போதும் இதேபோல ஜிஹாத்துக்கு அழைப்பு விடுத்துப் பேசினார். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட யாருமே நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். இதுவரை எந்தவித ரெய்டும் நாங்கள் நடத்தவில்லை. மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.