முல்லை பெரியாறு: புதிய அணை கட்டும் வரை உண்ணாவிரதம் - உம்மன்சான்டி
உப்புத்துறை: முல்லைபெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்டும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியில் முல்லைபெரியாறு சமிரா சமாதி என்ற அமைப்பினர் புதிய அணை கட்ட வேண்டி தொடர் உண்ணாவிரதம இருந்து வருகின்றனர்.
அவர்கள் நேற்று உண்ணாவிரத்தின் 1000வது நாளை விழா நடத்தினர். இதில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மேலும், சமீபத்தில் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய அணை கட்ட நில அளவை பணிகளை துவக்க அனுமதி கொடுத்ததை கொண்டாடவும் அவர்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சியில் உம்மன் சான்டி பேசுகையில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதுதான் நிரந்தர தீர்வு. தற்போது அணை அருகே சர்வே பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருந்த போதிலும் அணை கட்டும் பணி துவங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து நடத்த வேண்டும.
உறுதியான எண்ணத்துடன் போராடி வரும் மக்களின் இந்த போராட்டம் பாராட்டுக்குரியது. அவர்கள் காந்திய வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு கேரள மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை கவனிக்க வேண்டும் என்றார்.