ஹரியானா சட்டசபை தேர்தலில் யுவராஜ் தந்தை போட்டி
பஞ்சகுலா: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய லோக் தள கட்சி சார்பில் பஞ்சகுலா தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவுடன் கைகோர்த்துள்ள இந்திய தேசிய லோக் தளம் கட்சி நேற்று 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
இதில் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பஞ்சகுலா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
யுவராஜ் பிரசாரம செய்வார்...
இது குறித்து யோக்ராஜ் கூறுகையில்,
எனக்கு சௌத்ரி தேவி லாலின் கொள்கைகளில் அதிக பற்று உண்டு. கட்சி தலைமை எடுத்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். என்னை விரும்பும் யாரும் எனக்கு பிரசாரம் செய்யலாம். அதற்கு யாருக்கும் தடை விதிக்கப்படாது.
நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக யுவராஜ் கிரிக்கெட்டை விட்டுவிட வேண்டும் என நான் கூற மாட்டேன். அவர் தற்போது கிரிக்கெட் விளையாட தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார்.
அவர் எல்லாவற்றையும் விட தந்தை தான் முக்கியம் என நினைத்தால் நிச்சயம் எனக்காக பிரசாரம் செய்ய வருவார் என்றார்.
யுவராஜின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயாருடன் யுவராஜ் சிங் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.