சிதம்பரம் கோவிலில் இரட்டை சாவி முறை - அற நிலையத்துறை ஆணையர் தகவல்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சாவி, தீட்சிதர்கள் மற்றும் அற நிலையத் துறையிடம் ஆகிய இரு தரப்பினரிடம் இருக்கும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனால், கோவில் நிர்வாகம் முழுமையாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் ஆய்வு செய்தார்.
அப்போது இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியாதவது,
உயர்நீதி மன்ற தீர்ப்பை அடுத்து, நடராஜர் கோவில் அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
இரண்டாம் நிலையில் உள்ள இக்கோவிலை முதல் நிலைக்கு மாற்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக 13 வது நிதிக்குழுவில் 38 கோடி ரூபாய் கேட்டுள்ளோம்.
பொதுமக்கள், பக்தர்களின் கோரிக்கை ஏற்று கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி, பழநி கோவில்கள் போன்று நடராஜர் கோவில் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக அர்ச்சனை டிக்கெட், அபிஷேக கட்டணம், பிரசாதக் கடைகள் நடைமுறைப் படுத்தப்படும். கோவிலின் உள்ளே முக்கிய இடங்களில் உண்டியல் வைக்கப்படும்.
கோவிலுக்கு 2,594 ஏக்கர் நஞ்சை, 895 ஏக்கர் புஞ்சை என மொத்தம் 3,489 ஏக்கர் நிலம் உள்ளது. 467 ஏக்கர் நேரடி கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை குத்தகையிலும் உள்ளன.
கோவில் கட்டளைகள் குறித்தும், அதன் மூலம் வரும் வருவாய் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின்றி, கோவில் சொத்துக்களை விற்கவோ, குத்தகை விடவோ முடியாது.
கோவிலில் இரட்டை சாவி முறை அமல்படுத்தப்படும். அதன்படி, கோவில் சாவிகள் அனைத்தும் இரண்டாக போடப்பட்டு ஒன்று தீட்சிதர் செயலரிடமும், மற்றொன்று அறநிலையத்துறை செயல் அலுவலரிடமும் இருக்கும்.
அதே போன்று கோவில் பெயரிலும், தீட்சித்தர்கள் இருவர் பெயரிலும் ஜாயின்ட் கணக்கு வைக்கப்படும். பூஜை முறையில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை. வழக்கம் போல் நடைபெறும் என்றார்.