இலங்கை இந்துக்களை காப்பாற்ற வேண்டும்-விஸ்வ இந்து பரிஷத்
சென்னை: இலங்கை தமிழர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து இந்துக்களையும் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இன்டர்நெட் டிவி துவக்கவிழா நேற்று நடந்தது. இதில் அந்த அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், வேதாந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
டிவியை துவக்கி வைத்து அசோக் சிங்கால் பேசுகையில்,
இந்துக்கள் சகிப்புதன்மை கொண்டவர்கள். அவர்கள் தாமாக எந்த வன்முறையிலும் இறங்கமாட்டார்கள். அகிம்சையை கடைபிடிப்பவர்கள். ஆனால், இந்துக்களை வன்முறையாளர்களாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதில் எந்த உண்மையும் கிடையாது.
இந்துக்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் ஒப்பிடுகின்றனர். மேற்கிந்திய மீடியா இப்படி கதைகளை உருவாக்கி வருகிறது. இதை முறியடிக்க விளம்பரம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இன்று விஸ்வ இந்து இன்டர்நெட் டிவி துவக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அமைதியை கொண்டுவருவதே எங்கள் நோக்கம் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களின் நிருபர்க்கு அளித்த பதில்,
மீடியா செய்த தவறு...
நிருபர்: மகாராஷ்டிராவில் பாஜகவை ஆதரிக்க போவதில்லை என்றும், அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மும்பையில் கூறியிருக்கிறீர்களே?
அசோக் சிங்கால்: அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறவில்லை. செய்தியை திரித்து மீடியா தவறாக வெளியிட்டுவிட்டது. அத்வானி பெரிய அரசியல் கட்சியை வழி நடத்துகிறார். நான் அரசியல்வாதி கிடையாது.
உத்ராஞ்சல் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே பெரிய அணை கட்டப்போவதாக வந்த செய்தியை அடுத்து, அது குறித்து பேசவே நான் மும்பை சென்றேன். குறுக்கே பெரிய அணை கட்டினால் கங்கை பாழ்பட்டுவிடும். அதனால், ஆங்காங்கே சிறு சிறு அணைகள் கட்டலாம்.
இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய இந்தியாவில் உள்ள ஆச்சாரியார்கள், மடாதிபதிகள் அடுத்த மாதம் 6, 7ம் தேதிகளில் இமயமலை செல்ல இருக்கிறார்கள்.
நிருபர்: ஈழத் தமிழர்களின் நிலைமை தற்போது எப்படி உள்ளது?.
அசோக் சிங்கால்: இலங்கையில் வாழும் இந்துக்களை ஒழித்து கட்ட சிங்கள அரசு முயற்சித்து வருகிறது. அங்குள்ள 10 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர் மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.
இதே நிலைமைதான் நேபாளத்திலும் உள்ளது. பூடானில் உள்ள ஒரு லட்சம் இந்துக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதனால், உலக இந்துக்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காங்கிரஸ் கோழை...
நிருபர்: சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அடிக்கடி ஊடுருவல் நடக்கிறதே?.
அசோக் சிங்கால்: இந்தியா கோழைத்தனமான நாடு கிடையாது. ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு கோழைத்தனமாக உள்ளது. அதனால்தான், 10 லட்சம் ராணுவ வீரர்கள் எல்லைகளில் நின்றும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முடியவில்லை.