ஜாமீனில் வெளிவந்தவர் துப்பாக்கியுடன் கைது
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேறு வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பேபி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர் ஒரு சுற்றி வருவதை பார்த்தனர்.
அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 9எம்எம் ரக கைத்துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருந்ததை கண்டிபிடித்தனர்.
அதை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் சுந்தரராஜன்(27) என்பதும், அவர் டான்சி நகரில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
அவர் ஏற்கனவை கோயம்பேடு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், போலீஸார் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அவர் எதற்காக துப்பாக்கி வாங்கினார்? வேறு எதாவது கொலை முயற்சியில் ஈடுபட இருக்கிறாரா என விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளிகள் 13 பேரையும் தேடி வருகின்றனர்.