ஈரான், வட கொரியாவுக்கு அணு ஆயுதம்-ஏ.கியூ.கான் கடிதம் அம்பலம்
இஸ்லாமாபாத்: ஈரான், வட கொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை பாகிஸ்தான் அரசின் உத்தரவின் பேரில் தான் வழங்கியதாக அந்நாட்டு அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் தற்போது வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் அணு ஆராய்ச்சின் தந்தை என்றழைக்கப்படும் அப்துல் காதிர் கான் கடந்த 2003ம் ஆண்டு அணு ஆயுத தொழில்நுட்பங்களை ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 74 வயதான அவரை நீதிமன்றம் விடுவித்துவிட்ட போதிலும், அரசு வெளியில் விடவில்லை.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி மனித உரிமை தினத்தன்று, ஏகியூ கான் நெதர்லாந்தை சேர்ந்த தனது மனைவி ஹென்னிக்கு எழுதிய கடிதம் ஒன்றை தற்போது அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் வெளியி்ட்டுள்ளார்.
இந்த கடிதம் தற்போது தான் முதன் முதலாக வெளியிடப்படுகிறது என்றும், அவர் எழுதிய கடிதத்தின் ஒரு நகல் எனக்கு கடந்த 2007ம் ஆண்டு கிடைத்ததாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஏகியூ கான் கைப்பட எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் பல இடங்களிலும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இருக்கும் அணு ஆயுத உறவு பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே போல் ஈரான், வட கொரியா குறித்தும் கூறப்பட்டுள்ளது. லிபியாவின் பெயரும் அடிக்கடி இடம்பெற்றுள்ளது.
அதில்,
பெனாசிர் பூட்டோவின் ஆசிர்வாதத்தாலும், ஜெனரல் இம்தியாஸ் கேட்டு கொண்டதாலும் ஈரானுக்கு சில தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டது. என்னிடம் யாருக்கும வழங்க வேண்டும், அவர்களின் பெயர், முகவரியும் ஆகியவையும் கொடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுக்கு வரைபடமும், சில எந்திரங்களும் கொடுத்ததற்காக ஒரு தளபதிக்கு ரூ. 15 கோடி வாங்கி கொடுத்தேன். பாகிஸ்தானுக்கு முதன் முதலாக ஆணு ஆயுத உதவி அளித்த நாடு சீனா தான். 1982ம் ஆண்டு சீனா இரண்டு அணு குண்டு தயாரிக்க தேவையானவற்றை அளித்தது.
அதில் சுமார் 50 கிலோ செரியூட்டப்பட்ட யுரேனியங்கள், 10 டன் இயற்கையான யுரேனியம் புளூரைடு மற்றும் 5 டன் யுரேனியம் புளூரைடு (3 சதவீதம்) ஆகியவற்றை வழங்கியது.
சீனாவின் ஜியான் பகுதியில் ஹான்சாங் பகுதியில் ஒரு சென்ட்ரிபியூச் தொழிற்சாலையை நிறுவினோம்.
முதலில் இந்த திட்டத்துக்கு என்னை நன்றாக பயன்படுத்தி கொண்ட பாகிஸ்தான் அரசு பின்னர் என்னை கைகழுவி விட்டது என எழுதியுள்ளார்.