தீவிரவாத மிரட்டல்களை சந்திக்க தயார்-ப.சிதம்பரம்
டெல்லி: எத்தகைய தீவிரவாத மிரட்டல்களையும் சந்திக்க பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கின்றனர். தீவரவாதிகளின் சவால்களை சந்தித்து அவற்றை முறியடிக்க அவர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விரைவில் வரவுள்ளது. அதேபோல ஆயுத பூஜையும் வரவுள்ளது. இந்த சமயத்தில், கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இன்று டெல்லியில் நடந்த 22 புதிய காவல் நிலையங்கள் திறப்பின்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், நமது ஆயத்த நிலையை பல மடங்கு நாம் அதிகரித்துள்ளோம். எந்தவிதமான தீவிரவாத தாக்குதலையும், மிரட்டலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
ஒரு வேளை தீவிரவாத தாக்குதல் நடந்தாலோ அல்லது மிரட்டல் விடுக்கப்பட்டாலோ, நமது பதிலடி விரைவாகவும், இறுதியானதாகவும் இருக்கும்.
நாட்டுக்கு விடப்படும் எத்தகைய மிரட்டலையும் சமாளிக்கத் தேவையான ஆயத்த நிலையில் நமது பாதுகாப்புப் படையினரும், உளவுத்துறையினரும் உள்ளனர்.
தற்போது நாட்டுக்கு எந்தவித அபாயமும் இல்லை. எல்லைக்கு அப்பாலிருந்து நமக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் நமக்கு தெளிவாகவே தெரியும். நமது உளவுத்துறை மிகச் சிறப்பாக உள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.