உவரி அருகே ஜெர்மன் பயணியிடம் பணம் பறிப்பு
திசையன்விளை: உவரி அருகே ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பணப்பை பறிக்கப்பட்டது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜோசிம் ஆல்ரிச். இவரது மகன் ஆன்ட்ரஸ் ஆல்ரிச். இவர் இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்திருந்தார்.
உவரியில் உள்ள சர்ச், கோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு கூட்டபனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனில் தூத்துக்குடி செல்ல லிப்ட் கேட்டாராம்.
காரில் வந்த மூவரும் அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்றி சென்று ஆன்ட்ரஸ் ஆல்ரிசிடம் இருந்த பேக்கையும், அதில் இருந்த இரண்டாயிரம் ரூபாயையும் பறித்து விட்டு அவரை இடையன்குடி விளக்கு அருகே இறக்கிவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.