நக்சலைட்டுகளை தாக்கி அழிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள்
டெல்லி: நக்சலைட்டுகளின் கொட்டத்தை ஒடுக்க விமானப்படை மற்றும் இஸ்ரோவின் உதவியை உள்துறை அமைச்சகம் நாடியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதியில், நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படவுள்ளது. மேலும், நக்சலைட்கள் நடமாட்டம் குறித்து இஸ்ரோ சாட்டிலைட் படங்களை எடுத்து வழங்கவுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள திட்டம்..
கோப்ரா எனப்படும் நக்சலைட்டுகளுக்கு எதிரான கமாண்டோப் படையினர், மாநில போலீஸார், சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
மேலும், நக்சலைட்டுகளின் நடமாட்டத்தை இஸ்ரோ தனது செயற்கைக் கோள் மூலம் படம் பிடித்து தரும். மேலும் தேசிய தொழில்நுட்ப ஆய்வுக் கழகமும் தனது பங்களிப்பை வழங்கவுள்ளது.
நக்சலைட்டுகள் நடமாட்டத்தை முற்றிலும் முடக்கவும், அவர்களை ஒடுக்கவும், கமாண்டோப் படையினருக்கு உதவியாக முதல் முறையாக விமானப்படை மற்றும் இஸ்ரோவின் உதவி நாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.