நளினி-ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்
வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
அவரை விடுவிப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் ஆலோசனை கமிட்டியை கூட்டுவதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கான ஆலோசனை கமிட்டியை முறையாகக் கூட்டி நளினியின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், ஓராண்டாகியும் ஆலோசனை கமிட்டியை அரசு கூட்டவில்லை. இதை எதிர்த்து நளினி மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேலூர் சிறையில் நளினி, தன்னை விடுதலை செய்ய கோரி கடந்த திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக 13 கைதிகளும் உண்ணாவிரதத்தை துவக்கினர்.
அவரது உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளை எட்டியதையடுத்து சிறைதுறை அதிகாரிகள் இன்று நளினியை சந்தித்து, அவரது ரிக்கை குறித்து பரிசீலிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் ஆலோசனை கமிட்டியை கூட்ட இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து நளினி தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். நளினியின் வழக்கறிஞர் இளங்கோவன் மற்றும் சிறைபட்டோர் உரிமைகள் அமைப்பின் இயக்குனர் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் இத் தகவலைத் தெரிவித்தனர்.
ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்:
இந் நிலையில் தன்னையும் விரைவில் விடுதலை செய்யக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி ராபர்ட் பயஸ் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார்.
அவரது விடுதலைக்கு வகை செய்யும் விதத்தில் சிறை ஆலோசனைக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக சிறை அதிகாரிகள் கூறியதை ஏற்று அவர் தனது 6 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று மாலை விலக்கிக் கொண்டார்.
நேற்று மாலை 6.10 மணிக்கு கஞ்சி குடித்து தனது உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டார் பயஸ். இவர் கடந்த 19 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
செங்கை முகாமில் தொடரும் உண்ணாவிரதம்...
இதற்கிடையே, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 40 இலங்கை அகதிகள் நேற்று 3வது நாளாக தங்களது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
இவர்களும் தங்கள் மீதான வழக்குகளை விரைவில் விசாரித்து விடுதலை செய்து குடும்பத்தினருடன் இணைய அனுமதிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
வைகோ வேண்டுகோள்:
இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலை எப்போது என்று தெரியாமல் சிறைக்கு உள்ளே கிடந்து துன்பப்படுவதைவிட மரணமே மேல் என்று உள்ளம் உடைந்து, நளினி, ராபர்ட் பயஸ் இருவரும், காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர். வேறு பல வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, கருணை அடிப்படையில் ரத்துச் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்புகையில், அதே மனிதாபிமான அணுகுமுறை, வேலூர் மத்திய சிறையில் மனத் துன்பத்துக்க ஆளாகி உள்ள மரண தண்டனைக் கைதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.
எனவே மற்ற கைதிகளை விடுவித்தது போல, அதே அடிப்படையில் இவர்களின் கோரிக்கையையும் மனித நேயத்துடன் பரிசீலித்து விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.