'அல்-கொய்தா': யுஎஸ் முழுவதும் உஷார் நிலை
வாஷிங்டன்: அல்-கொய்தா எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் அனைத்து மாகாண போலீஸாருக்கும் எப்பிஐ எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க போலீஸார் டென்வர் விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்த நபிபுல்லா ஜசி என்ற 24 வயது வாலிபரை கைது செய்தனர்.
ஆப்கானிஸ்தான் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்த அவர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று தீவிரவாத மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், அவரது லேப்டாபில் போலீஸார் வெடிகுண்டு தயாரிக்கும் குறிப்புகளை எப்பிஐயினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அவருக்கு அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் எப்பிஐ கடந்த செப்டம்பர் 11, 2001ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டது போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என கருதுகிறது.
இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய மர்ம நபர் ஒருவரை ஜசி சந்துள்ளார் என கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் எப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், ஜசியின் தந்தை முகமது ஜசி (53) மற்றும் நியூயார்க் குயின்ஸ் பகுதியை சேர்ந்த முகமது வையிஸ் அப்சலி (37) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து நியூயார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தீவிரவாதிகள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்பது தெரியவில்லை. இதனால் நியூயார்க் முதல் டென்வர் வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பை கூடுதலாக்கி உள்ளோம் என்றார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் தலைமை போலீஸ் வில்லியம் பிராட்டன் கூறுகையில், தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து வருகிறோம் என்றார்.
நியூயார்க் நகர கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் குண்டு, கார் குண்டு, விமான குண்டு...
அதேபோல் சின்சினாட்டியில் உள்ள இரண்டு பிரபல விளையாட்டு மைதானங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸாருக்கு அனுப்பட்டுள்ள அறிக்கையில்,
கிரேட் அமெரிக்கன் பால்பார்க் மற்ரும் பால் பிரவுன் மைதானம் இரண்டு அதிக மக்கள் வரக்கூடிய பகுதிகள். இதனால் இங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம்.
தீவிரவாதிகள் தொடர் குண்டுகள், கார் குண்டுகள் அல்லது விமானத்தை கடத்தி வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தலாம் என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.