ஆவடி, தாம்பரத்தில் 2 புதிய மாநகராட்சிகள்?
சென்னை: சென்னை மாநகராட்சியைப் பிரித்து ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகள் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
சென்னை மாநகரின் மிக வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாம்பரம், அம்பத்தூர் ஆகிய இரு மாநகராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டது.
இது குறித்து ஆராய சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.), வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.
அதில் சென்னை அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்காமல், சென்னை மாநகராட்சியின் எல்லையை மேலும் விரிவாக்கலாம் என்று ஒரு பரிந்துரையையும்,
அல்லது சென்னை மாநகராட்சியின் எல்லையை சிறிய அளவில் அதிகரித்துவிட்டு, முன்பு கருத்தில் கொள்ளப்பட்ட அம்பத்தூருக்கு பதிலாக ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாநகராட்சியையும், தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என்று இரண்டாவது பரிந்துரையையும் முன் வைத்தது.
இந்தப் பரிந்துரைகள் குறித்து முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் சூசன் மேத்யூ, உறுப்பினர் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன்,
ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, வீட்டுவசதித் துறை செயலாளர் சுர்ஜித் கே.செளத்ரி, நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
குழு கூறியுள்ள இரு பரிந்துரைகளின் சாதக, பாதகங்களை முதல்வருக்கு அதிகாரிகள் பவர்-பாயிண்ட் பிரசன்டெசனுடன் விளக்கினர்.
இதையடுத்து இந்தப் பரிந்துரைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறையினர் மேலும் விரிவாக ஆய்வு நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
ஸ்டாலின் பேட்டி:
இந் நிலையில் நந்தனம் டர்ன்புல் சாலை-செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ.19.93 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. பாலத்தை அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைப்பார்.
அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.6.03 கோடி செலவில் கட்டப்படுகிறது. இப்பாலப் பணியும் அடுத்த மாதம் அக்டோபரில் முடிவடையும்.
வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையின் மீது மேம்பாலம் அமைக்கும் பணியை ரூ.61.7 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பிரித்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்த பரிசீலனை அரசின் ஆய்வில் உள்ளது என்றார்.