உதவி பெற வந்த பெண்ணிடம் விஏஓ சில்மிஷம்!
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் பத்தமடையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்காக புகைப்படம் எடுக்க வந்த பெண்களிடம் விஏஓ தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் பணி பத்தமடை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்காக பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்க திரண்டனர்.
அப்போது அங்கிருந்த விஏஓ ஒருவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதை புறக்கணித்தனர். விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அந்த விஏஓ மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
விஏஓக்கு பளார்-ஊராட்சி து.தலைவர் கைது:
இதற்கிடேயே இரண்டு குடும்ப அட்டை வைத்திருந்ததை தட்டிகேட்ட விஏஓவை பளார் என அறைந்த திருவாடனை ஊராட்சி துணை தலைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாண்டுகுடி விஏஓவாக பணியாற்றி வருபவர் பாலகுரு.
இவர் ரேஷன் அட்டை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஊராட்சி துணை தலைவர் வேலவன் பெயர் இரண்டு ரேஷன் கார்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
இதனால் ஒரு அட்டையிலிருந்த அவரது பெயரை விஏஓ பாலகுரு நீக்கினார்.
இதனையறிந்த வேலவன், விஏஓவுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வேலவன், விஏஓவை கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார்.
இந்த சம்பவத்தால் மிகவும் மன வேதனையடைந்த விஏஓ, தொண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அரசு ஊழியரை கை நீட்டி அடித்த காரணத்துக்காக எஸ்ஐ நாகராஜ் ஊராட்சி துணை தலைவர் வேலவனை கைது செய்தார்.