சூறாவளியில் சிக்கி வங்கதேசம் அருகே 5 சென்னை மீனவர்கள் பலி
சென்னை: சென்னையைச் சேர்ந்த படகு சூறாவளியில் சிக்கி வங்கதேசத்தில் கரை ஒதுங்கியது. அப்போது சாப்பிடாமல் இருந்ததால் ஐந்து மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் கிட்டத்தட்ட நான்கு மாத துயரத்திற்குப் பின்னர் சென்னை திரும்பியுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், ஒரு படகில் மீன் பிடிக்க கடந்த மே மாதம் 31-ந் தேதி கடலுக்கு சென்றார்கள். அவர்கள் சென்ற படகு, சூறாவளியில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து, கடலில், காற்று வாக்கில் இழுத்து செல்லப்பட்டது.
பல நாட்கள் கரை தெரியாத நிலையில் தவித்த மீனவர்கள் 8 பேரும், உண்ண உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்தனர். இந்த நிலையில் 8 மீனவர்களில் ஐந்து பேர் கடலில் குதித்து நீந்தி ஏதாவது படகு தென்படுகிறதா என்று தேடியுள்ளனர். ஆனால் அந்த ஐந்து பேரும் மீண்டும் திரும்பி வரவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அவர்களது பெயர்கள்- அழகிரி, நிக்சன், நிதின் என்கிற நவீஸ், பாபு, ராஜன்.
சில நாட்கள் கழித்து அந்த படகு, வங்காள தேசத்தில், பதுகாலி மாவட்டம் ரங்க பல்லி என்ற கடற்கரை கிராமத்தில் கரை ஒதுங்கியது. அப்போது அதில் இருந்த படகு டிரைவர் மகேந்திரன் (வயது40), தங்கராஜ் (30), தேசிங் (26) ஆகிய 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை அங்குள்ள போலீசார் மீட்டு, சிகிச்சை அளித்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் குறித்த தகவல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், வங்காள தேச கோர்ட்டில் 3 மீனவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் மூன்று மீனவர்களும், வேண்டும் என்றே வங்காள தேசத்துக்குள் அத்துமீறி நுழையவில்லை. அவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்து விடலாம் என்று கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து மூன்று மீனவர்களும் நேற்று கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.