முழு உஷார் நிலையில் தமிழக போலீஸ் - டிஜிபி
மதுரை: தீவிரவாதத் தாக்குதல்களை சமாளித்து முறியடிக்க தமிழக காவல்துறை தயாராகவே உள்ளது. இலங்கையில் போர் முடிந்து விட்டதால் தமிழக காவல்துறையினர் அசட்டையாக இல்லை என்று காவல்துறை டிஜிபி கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.
மதுரை வந்த டிஜிபி ஜெயின் அங்கு நடந்த ஓஎன்ஜிசி பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் டிஜிபி பேசுகையில், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2வது கட்ட பலப்படுத்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பல்வேறு உளவு அமைப்புகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழக போலீஸார் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக கடலோர பாதுகாப்புக் குழுவினர், மீனவர்களுடன் ஒருங்கிணைந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் என்றார்.