முதல்வருக்கு 2,000 போஸ்ட் கார்டுகள்!
மதுரை: இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2 ஆயிரம் போஸ்ட் கார்டு அனுப்பி வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழாசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கழகம் ஆகியவை இணைந்து இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் பணி உயர்வில் சதவீதம் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பள்ளி துணை ஆய்வாளர் பணிகளை ரத்து செய்தது, தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைப்படுத்துதல், 6 முதல் 10 ம் வகுப்பு வரை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உயர்த்துதல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து இந்த சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று முதல்வர் கருணாநிதிக்கு இரண்டாயிரம் போஸ்ட்கார்டுகளை அனுப்பி வைத்தனர்.
இந்த கூட்டமைப்பின் தொடர்பாளர் மகேந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஜெயக்கொடி, தலைமை ஆசிரியர் சங்க புரவலர் ராஜூ, ஆரோக்கியசாமி முத்தையா, தமிழாசிரியர் கழக முனியாண்டி, ரேணுகா, உடற்பயிற்சி ஆசிரியர்கள் நவமணி, இடைநிலை ஆசிரியர் மணிகண்டன் உட்பட பலர் இந்த நூதன பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.